×

மேட்ரிமோனி மூலம் கைம்பெண்களுக்கு வலை விரித்து மோசடி: எக்ஸ்கியூஸ்மி நான் பெரிய பிசினஸ்மேன்… உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்… 167 சவரன் நகை, 2 சொகுசு கார்கள் பறித்த கில்லாடி கைது

கோவை: மேட்ரிமோனி மூலம் பெண் டாக்டர் உள்ளிட்ட கைம்பெண்களை குறிவைத்து மோசடி செய்த கில்லாடி கைது செய்யப்பட்டார். கோவை பேரூர் சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (42). இவர் கடந்த 5 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடம் விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். இதையடுத்து மேட்ரிமோனி மூலம் 2வது திருமணம் செய்ய பெண் தேடி வந்தார். அப்போது, நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்த கைம்பெண் ஒருவர், வரன் தேடி பதிவிட்டிருந்ததை ரவிச்சந்திரன் பார்த்தார். பின்னர், அதில் உள்ள செல்போன் எண்ணை எடுத்து, போனில் அவரை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, தனது பெயர் ரவிச்சந்திரன். மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். தனக்கு சொந்தமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளது. சென்னையில் 60 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, பெங்களூருவில் பங்களா உள்ளது. தான் விவகாரத்து பெற்று விட்டதால் தன்னுடன் யாரும் இல்லை. நான் மட்டுமே தனியாக இருக்கிறேன். உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’ என்று உருக்கமான பேசி உள்ளார். ரவிச்சந்திரனின் பேச்சை கேட்ட பெண், திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்துவிட்டார். தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி வந்தனர்.

ஒருநாள் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய ரவிச்சந்திரன், தனக்கு திருமண தடை தோஷம் இருப்பதாகவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டி இருப்பதால் உங்களால் முடிந்த உதவி செய்ய முடியுமா? என கேட்டார். அந்த பெண்ணும், வருங்கால புருஷன்தான் என்று எண்ணி தன்னிடம் இருந்த 167 சவரன் நகையை கொடுத்து உள்ளார். நகை, பணத்தை வாங்கிய பிறகு அப்பெண் ரவிச்சந்திரனை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் இதுகுறித்து பேரூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ரவிச்சந்திரனை தேடி வந்தனர்.

அவரது செல்போனை ஆய்வு செய்ததில் கரூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவரவே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பதுங்கியிருந்த ரவிச்சந்திரனை கைது செய்தனர். அப்போது அவருடன் பெண் ஒருவரும் இருந்தார். விசாரணையில், அவர் கரூரை சேர்ந்த கைம்பெண் என்பதும், பல் டாக்டராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ரவிச்சந்திரன், தனது மனைவியை பிரிந்து சென்ற பின்னர் தனியாக வசித்துள்ளார். அப்போது 2வது திருமணத்திற்காக பெண் தேடிய அவர், நாமக்கல்லை சேர்ந்த பெண்ணிடம் பேசி பணத்தை பறித்து சென்றார்.

பின்னர், நேராக கரூர் பகுதிக்கு சென்ற ரவிச்சந்திரன், அந்த பகுதியில் பல் டாக்டராக இருந்து வரும் கைம் பெண்ணுடன், ஆன்லைன் வாயிலாக தொடர்பை ஏற்படுத்தி கொண்டு, அவருடனும் பேசி வந்தார். அவரிடமும் நாம் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். டாக்டரும் நம்பவே இரண்டு பேரும் கணவன், மனைவி போல ஒன்றாக வாழ துவங்கியுள்ளனர். வீட்டில் இருந்தால் கண்டுப்பிடித்து விடுவார்கள் என நினைத்த ரவிச்சந்திரன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கும் விடுதிகள், லாட்ஜ்களிலேயே தங்கி உள்ளார்.

பல் டாக்டரிடம் இருந்து பணம் பெற்று 2 சொகுசு கார்களை வாங்கியும், அவரிடம் இருந்து பெற்ற பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தும் வந்து உள்ளார். இதேபோல் அவர் பீளமேடு, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் தனது கைவரிசையை காட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், ரவிச்சந்திரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மேட்ரிமோனி மூலம் கைம்பெண்களுக்கு வலை விரித்து மோசடி: எக்ஸ்கியூஸ்மி நான் பெரிய பிசினஸ்மேன்… உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்… 167 சவரன் நகை, 2 சொகுசு கார்கள் பறித்த கில்லாடி கைது appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Coimbatore ,Gilladi ,Savaran ,Dinakaran ,
× RELATED நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கொன்ற நபர் கைது!